பாவம் தமிழ்
Google Buzz Logo

இன்று பொதிகை தொலைக்காட்சியில் 10ஆம் வகுப்பு தமிழ் வினாவிடை நிகழ்ச்சியை பார்த்த போது "இப்படியெல்லாம் பாடம் நடத்தினால் பசங்க உருப்பட்டா மாதிரிதான்" என்று தோன்றியது.

நடத்தியவர் அப்படியே வினா-விடையை படித்தார். அப்படி படிக்க பசங்களுக்கே தெரியுமே? நீங்க எதுக்கு? உங்கள மாதிரி ஆளுங்களால தான் தமிழ் படிக்கவே நிறைய பேரு யோசிக்கறான்.

நிகழ்ச்சியில் அவர் படிச்ச ரெண்டு கேள்விகளை எடுத்துக்கலாம்...

குறிஞ்சித் திணையின் நில அமைப்பு யாது? - இது கேள்வி

மலையும் மலை சார்ந்த நிலமும் - இது பதில். சொல்லீட்டு அடுத்த கேள்விக்கு போயிட்டார். இது தான் திரையில ஓடும் போதே எங்களால படிக்க முடியுதே. நீங்க வேற எதுக்கு படிச்சு சொல்லனும்?

எங்க தமிழாசிரியர் இதை நடத்தியிருந்தால் எப்படின்னு விளக்கியிருப்பார். இல்லைன்னா குறைஞ்ச பட்சம் எப்படி ஞாபகம் வைப்பதுன்னாவது சொல்லியிருப்பார்.

மேலே கேள்வி பதிலை சொல்லீட்டு "டே.. பசங்களா.. போன முறை விடுமுறையில் நாமெல்லாம் ஊட்டிக்கு பயணம் போனப்போ குறிஞ்சிப்பூ பாத்தோமில்லையா? அது எங்கே வெளைஞ்சிருந்தது?"

"மலை மேலே... ஐயா..."

"அதே தான்... குறிஞ்சித் திணையின் நிலம் - மலையும் மலை சார்ந்த இடமும். மனசுல வச்சிக்கங்க"

சரி அடுத்த கேள்விக்கு போலாம்.

கூவிளம் என்பது என்ன சீர்? - இது கேள்வி

நேர்நிறை . - இது பதில். அவ்வளவு தான். அப்படியே நிகழ்ச்சி நடத்தியவர் அடுத்த கேள்விக்கு தாவிட்டார்.

எங்க தமிழாசிரியரா இருந்தா "டே...பசங்களா.. இந்த கூவிளம். அப்படிங்கற வார்த்தையை சீர் பிரிச்சு பாரு..."

கூ - ஒற்றை நெடில் - நேர் சீர்.
விளம் - இரட்டை குறிலுடன் ஒற்று - நிறை சீர்.

"இப்போ ரெண்டையும் சேர்த்து சொல்லு..."

நேர்நிறை..

"அதே தான்... புரிஞ்சதா?.. அது மட்டுமில்ல.. 'நேர்நிறை'யை சீர் பிரிச்சுப் பாரு.. அதே சீர் தான் வரும்..."

ம்... நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பொதிகை தொலைக்காட்சியில் பாடம் நடத்தியவரின் மாணவர்கள் தான் பாவம்...